தாயிற்கும் மகனுக்குமான கடைசி
உரையாடல்..(Sahaba Stories)
அப்துல்லாஹ் இப்னு
ஜூபைர் (ரலி)
அவர்கள், தங்கள் தாயான அஸ்மா பின்த்
அபுபக்கர் (ரலி) அவர்களுடன் உரையாடிய
நெகிழ்வான சம்பவம்…
கிலாபத்தே உமய்யாவில்
வாரிசுமுறை
முடிசூட்டப்பட்டவர் யசீத். இந்த செயல் கிலாபத் என்னும் இறையாட்சி தத்துவத்திற்கு எதிரானது என்பதால்
எந்த முஸ்லிம் தலைவரும் இதை ஏற்பார்
இல்லை . ஆனால் யாரும் அவர்களை
எதிர்த்து கேட்கவில்லை.
நபிகளாரின் பேரர் ஆன ஹுசைன் (ரலி) அவர்களும், அப்துல்லாஹ் இப்னு ஜூபைர் (ரலி) அவர்களும் எதிராக குரல் கொடுத்தனர் .செயல் ரீதியாக மோதவும் செய்தனர்.
கர்பலா வில் இமாம் ஹுசைன் (ரலி)
கொல்லப்பட்டார்கள்.அதை தொடர்ந்து
அப்துல்லாஹ் இப்னு ஜூபைர் (ரலி)
அவர்களும் உமய்யா ஆட்சியை ஏற்காமல்
மக்காவை தனியே ஆட்சி செய்து வந்தார்கள்.
இதனால் உமய்யாகளின் கொடுங்கோல்
அரக்கன் ஹஜ்ஜாஜ் இப்னு யூசுப் மக்காவை கைப்பற்ற தாக்குதல் நடத்தினான். ஆம் கஃபா தாக்குதலுக்கு
உள்ளானது. குண்டு மலை பொழிந்தான்
அரக்கன் ஹஜ்ஜாஜ்.
இந்நிலையில் அப்துல்லாஹ் இப்னு ஜூபைர் (ரலி) அவர்களின் படையினர்
அனைவரும் கொல்லப்பட்டனர்.
இந்நிலையில் போருக்கு தயாராகி தன் தாயை சந்தித்து விடைபெற்று செல்ல வருகிறார்.
அன்னையோ நூறு வயதை தாண்டி
பார்வை மங்கிய நிலையில் இருந்தார்கள்.
அப்துல்லாஹ் (ரலி) போரின் நிலையை
கூறினார்.
வரலாற்றில் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்படவேண்டிய அந்த வீர தாய்
அஸ்மா ரலி அவர்களுடனான உரையாடல்.
அன்னையே என் தோழர்கள் அனைவரும்
கொல்லப்பட்டனர். நானும் என்னுடைய குடும்ப உறுப்பினர்கள் மட்டுமே எஞ்சியுள்ளோம்….
நிச்சயமாக மரணத்தில் நிம்மதி உண்டு..
உங்கள் எண்ணம் என்ன என்று அறிய
வந்தேன்.
அன்பு மகனே! உனக்கு நன்மை எதில் இருக்கிறது என்பதை நீ நன்கு அறிவாய். நீ சத்தியத்தின் பக்கம்தான் இருக்கின்றாய் என்பதில் உமக்கு உறுதி இருந்தால், நீ நிலைகுலையாதிருக்க வேண்டும். எதற்காக உன் தோழர்கள் போரிட்டு இறந்தார்களோ அதுபோல் நீயும் போரிடு…உயிருக்கு அஞ்சி எவ்வித இழிவையும் சுமந்து கொள்ளாதே! வாளேந்திப் போரிட்டு கண்ணியமாக மரணிப்பது, இழிவுடன் இன்பமாய் வாழ்வதை விடச் சிறந்தது. நீ வீரனாக மரணித்தால் நான் மகிழ்வேன்.
ஆனால் அழிந்து போகும் இந்த உலகை பொருந்தி கொண்டால் உன்னை விடவும் கெட்டவன் வேறு யார் இருக்கமுடியும்? எனவே, நாம் மட்டும்தானே தன்னந்தனியாக எதிர்க்கின்றோம், ஆகவே இப்பொழுது கீழ்படிந்து செல்வதே சிறந்தது என்று நீ கருதுவாயானால் அது நல்லடியார்களின் போக்கு அல்ல! நீ எது வரையில் உயிர் வாழ்ந்திடுவாய்? என்றாவது ஒருநாள் மரணம் அடையத்தானே போகிறோம்! எனவே நற்பெயருடன் மரணமாகு, அப்பொழுதான் பெருமைப்படுவேன்!’
அன்னை அஸ்மா (ரழி) அவர்களின் இந்த வார்த்தைகளை மீண்டும் ஒரு முறை கவனமாய் படித்துப் பாருங்கள். இப்பொழுது போரிடுவது மரணத்தை
தானே வலிந்து அழைப்பதற்கு சமம் என்பதையும் தம்முடைய அன்பு மகனார் கண்ணெதிரிலேயே மரணப்படுகுழியில் விழப் போகின்றார் என்பதையும் அறிந்த ஒரு தாயார் அளித்த அறிவுரையாகும் இது!
அப்துல்லாஹ் இப்னு ஜூபைர் (ரழி) அவர்கள் தாயாரின் இத்தகைய துணிவான சொற்களைக் கேட்டதும் மனம் நெகிழ்ந்து பணிவுடன் வேண்டினார்கள்.
என் அன்புத் தாயே, எதிரிகள் என்னைக் கொன்று எனது உடலைப் பலவிதமாகக் கோரப்படுத்தி விடுவார்களோ எனும் அச்சுகிறேன்!||
மகனே, நீ எண்ணுவது சரிதான்! ஆனால் ஆட்டை அறுத்த பிறகு அதனுடைய தோலை உரிப்பதனாலோ அதன் சதைகள் துண்டு துண்டாக ஆகுவதால் எந்த வேதனையும் ஏற்படாதே!||
உண்மையில் அப்துல்லாஹ் இப்னு ஜூபைர் (ரழி) அவர்கள் எதற்காக இவ்வாறு கேட்டார்களெனில் தம்மைக் கொன்று உடலைச் சிதைத்து விடுவார்களோ எனும் அச்சத்தினால் அல்ல, வயது முதிர்ந்த தமது தாய் எவ்வாறு இந்தத் துக்கத்தை தாங்கிக் கொள்கின்றார்கள் என்பதைப் பார்ப்பதற்காகத்தான்!
அப்துல்லாஹ் இப்னு ஜூபைர் (ரழி) அவர்கள் தம் தாயார் திருப்தியுடன் இருப்பதை அறிந்ததும் உடனே அவரின் கரங்களைப் பிடித்து முத்தமிட்டவாறு –
என் அன்புத் தாயே! நானும் இவ்வாறுதான் சிந்தித்துக் கொண்டிருக்கின்றேன். அதாவது சத்தியத்திற்கு எதிரில் இந்த உலகம் சாதாரணமானதுதான். மேலும் இஸ்லாத்திற்கும் அதன் கொள்கை கோட்பாடுகளுக்கும் உறுதியும் வலிமையும் சேர்ப்பதற்காகத்தான் இப்பணிகளையெல்லாம் நான் ஆற்றியுள்ளேன்!
மகனே, இன்ஷா அல்லாஹ் எனது பொறுமை மக்களுக்கு ஒரு முன் மாதிரியாக அமையும் என்று நான் எண்ணுகிறேன். நீ என் முன்னிலையில் சத்தியத்திற்காக உயிரை விடுகின்றாய் எனில் உனது தியாகம் எனக்கு நன்மை கிடைப்பதற்குக் காரணமாகவும் அமையும்! மேலும் நீ வெற்றி அடைந்தாலோ நான் பெருமகிழ்ச்சி அடைவேன். இப்போது அல்லாஹ்வின் பெயரை மொழிந்தவாறு புறப்படு, என்ன நடக்கிறது என்று பார்!
இதனைக் கேட்டதும் அப்துல்லாஹ் (ரழி) அவர்கள் தம் தாயை கட்டித் தழுவினார்கள். அஸ்மா (ரழி) அவர்கள் பார்வை இழந்திருந்திருந்தார்கள். தம் அன்பு மகனை ஆரத் தழுவியபோது அவருடைய உடலின் மீது உருக்குக் கவசம் இருப்பதை கரங்கள் உணர்த்தின.
மகனே, யார் சத்தியத்திற்காக உயிரை தியாகம் செய்ய விரும்புகின்றார்களோ அவர்கள் கவசம் அணிந்து கொள்வதில்லை. எனவே அதனைக் கழற்றிவிடு. உடுப்பை வரிந்து கட்டிக்கொண்டு எதிரிகள் மீது தாக்குதல் தொடு!
நீ வீரர் ஜுபைரின் மகன் … ஆயிரம் வீரருக்கு சமமானவர் அவர்..அதுபோல்
நீயும் ஆயிரம் வீரருக்கு சமமாக போரிடு
என்று அறிவுறுத்தினார்கள்!
அப்துல்லாஹ் இப்னு ஜூபைர் (ரழி) அவர்கள் அவ்விதமே செய்தார்கள். வீரத்துடன் போர்களம் சென்றார் .
நன்பகல் முதல் மாலை வரை போரிட்டார்.
பல எதிரிகளை சாய்த்தார். அவர்கள் கால்கள் வெட்டப்பட்டன கீழே சரிந்தபோதும் போரிடுவதை நிறுத்தாது
சண்டையிட்டு வீரமரணம் அடைந்தார்….
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி
ராஜிவூன்.
அப்துல்லாஹ் இப்னு ஜூபைர் (ரழி) அவர்கள் மதீனாவிற்கு ஹிஜ்ரத்தில்
பிறந்த முதல் குழந்தை என்பதால்
பிறந்த அந்நாளில்
மதீனாவே மகிழ்ச்சியில் திளைத்தது.
இறந்த அன்றோ மக்கா மாநகரமே
கண்ணீர் கடலில் தத்தளித்தது….
இதை கண்ட ஹஜ்ஜாஜ் “இப்னு ஜூபைர்
கலீஃபா வை ஏற்கவில்லை . அதனால்
மக்காவை விட்டு துடைத்தெறியப்பட்டார்.
ஆதம் (அலை) அல்லாஹ் தடுத்ததை
மீறியதால் ஆதம் (அலை) சொர்க்கத்தை
விட்டு துடைத்தெரியப்பட்டார்…
இப்னு ஜுபைரை விட ஆதம் சிறந்தவர்.
மக்காவை விட சொர்க்கம் சிறந்தது”
என மக்களை மக்களை தன் பக்கம்
ஈர்க்க தன் செயலை நியாயப்படுத்தி
மக்களிடம் சூழ்ச்சி செய்தான்….
பிறகு ஹஜ்ஜாஜ் அண்ணல் நபிகளாரின் அன்புத் தோழர் ஒருவரின் உடலை அவருடைய தாயாரிடம் ஒப்படைக்காமலும் முறையாக அடக்கம் செய்ய விடாமலும் கழுமரத்தில் கட்டித் தொங்கவிட உத்தரவிட்டு தான் புரிந்து வந்த கொடுமைகளின் பட்டியலில் இந்தக் கொடூரச் செயலையும் சேர்த்துக் கொண்டான்.
மறுநாள் அன்னை அஸ்மா (ரழி) அவர்கள் வேலைக்காரப் பெண்மணி ஒருவரின் துணையுடன் தம்முடைய அருமை மகனாரின் உடலைத் தேடி வந்தார்கள். உடல் கழுமரத்தில் கட்டித் தொங்கவிடப்பட்டிருந்தது. அபூபக்கர் சித்தீகின் மூத்த மகள் எஃகு போன்ற ஏன் அதனையும் விஞ்சும் அளவுக்கு மனத்திண்மை பெற்றிருந்தார். அப்பொழுது அவருடைய நாவு உச்சரித்த வார்த்தைகள் என்ன தெரியுமா?
இஸ்லாத்தின் இந்த மாவீரன் தியாக மறவன் இன்னும் குதிரையை விட்டு இறங்கவில்லையே!
ஹஜ்ஜாஜ் இப்னு யுசுஃப் நல்ல பேச்சாற்றல் கொண்டவன். அத்தகைய ஹஜ்ஜாஜிடம் அன்னை அஸ்மா (ரழி) அவர்களுடைய மனவேதனையையும் சோகத்தையும் உள்ளடக்கிய, ஆனால் வீரம் நிறைந்த இந்த வார்த்தைகள் எடுத்துச் சொல்லப்பட்டபோது அவர் கோபத்தால் தன் உதடுகளைக் கடிக்கலானார். நேராக அஸ்மா (ரழி) அவர்களிடம் வந்து ஒரு சொற்போரையே தொடங்கினார்.
உம்முடைய மகன் அப்துல்லாஹ் கஅபா ஆலயத்தினுள் உட்கார்ந்து கொண்டு இறைச் சட்டங்களுக்கு எதிரான நடவடிக்கைகளில் இறங்கினாறெனில் அவருக்கு எவ்வளவு துணிச்சல்! ஆகையால்தான் அல்லாஹ் அவர் மீது இந்த வேதனையை இறக்கியுள்ளான்.
நீ பொய் சொல்கின்றாய்! என்னுடைய மகன் இறைச் சட்டங்களுக்கு எதிராக செயல்படுபவன் அல்லன். அவன் நோன்பாளியாகவும், தஹஜ்ஜூத் இரவுத் தொழுகை தொழுபவனாகவும், பரிசுத்தவானாகவும், பக்திமானாகவும் திகழ்ந்தான்! தாய் தந்தையரின் சொல்லை மதித்து நடந்தான். ஆனால் கேள்! அண்ணல் நபி (ஸல்) அவர்கள் ஒருபோது இவ்வாறு கூறியதை நான் கேட்டுள்ளேன். அதாவது ஸகீஃப் கோத்திரத்திலிருந்து இரண்டு மடையர்கள் தோன்றுவார்கள். முதலாமவன் பொய்யனாகவும், இரண்டாமவன் கொடுங்கோலனாகவும் இருப்பார்கள் அதன்படி ஸகீஃப் குலத்தைச் சார்ந்த முக்தார் எனும் பொய்யனை நான் பார்த்துவிட்டேன். மற்றொருவனாகிய கொடுங்கோலன் இப்பொழுது என் முன்னிலையில் நின்று கொண்டிருக்கிறான்.
பளீரென சாட்டை கொண்டு தாக்குவது போன்று இந்தப் பதிலைக் கேட்டதும் ஹஜ்ஜாஜின் மனம் துடிதுடித்துப் போய்விட்டது. அவருடைய முகத்தில் இழிவும், கேவலமும் கூத்தாட தலையைத் தாழ்த்தியவாறு கொஞ்ச நேரம் மௌனமானான். நிலவிய நிசப்தத்தை சீக்கரமாகக் கலைத்துக் கொண்டு, உம்முடைய மகனுக்கு நான் நல்ல பாடம் புகட்டியிருக்கிறேன், என்று பிதற்றினார்!
நீ என்னுடைய மகனின் உலக வாழ்க்கையைத்தான் பாழ்படுத்தினாய், பரவாயில்லை! ஆனால் என் மகனோ உனது மறுமை வாழ்வை பாழ்படுத்திவிட்டான்!
இந்த அழுத்தமான பதிலைக் கேட்டதும் ஹஜ்ஜாஜ் நிதானம் இழந்தார். உணர்ச்சி வசப்பட்ட நிலையில் அவருடைய நா உளறிக்கொட்டியது.
இரண்டு வார்களுடைய இந்தக் கிழவி மதியிழந்து விட்டாள்.
இந்தக் குத்தல் பேச்சைக் கேட்டதும் அஸ்மா (ரழி) அவர்கள் ஹஜ்ஜாஜை அதட்டியவாறு கூறினார்கள்.
அல்லாஹ்வின் நபியவர்கள் உண்மையைத்தான் உரைத்தார்கள். உண்மையில் எந்தக் கொடுங்கோலனைப் பற்றி நபியவர்கள் முன்னறிவிப்புச் செய்தார்களோ அந்தக் கொடுங்கோலன் நீதான். கொடுங்கோலனே, உனது ஆணவப் பேச்சுக்கு இதோ எனது பதில். ஆம், நான் இரண்டு வார்களை உடையவள்தான்! அல்லாஹ்வின் நபிதான் அவ்வாறு பெருமையாகக் கூறி என்னை அழைத்தார்கள். ஆனால் நீயோ நபியவர்கள் சூட்டிய அதே வார்த்தையைக் கூறி என்னை இழிவுபடுத்துகின்றாய்!
ஹஜ்ஜாஜ் இதற்குப் பதில் ஏதும் கூறாமல் முகத்தைத் திருப்பிருக் கொண்டு போய்விட்டான்…!
பிறகு கலீஃபா அப்துல் மலிகிடமிருந்து, அப்துல்லாஹ்வின் உடலை அவருடைய தாயாரிடம் ஒப்படைத்து விட வேண்டும் என கட்டளை வந்தது. அன்னாரது உடலின் ஒவ்வொரு பகுதியும் சிதைத்துக் கோரப்படுத்தப்பட்டிருந்தது!
வாழ்க்கையின் இறுதி நிலையை அடைந்து விட்டிருந்து அஸ்மா (ரழி) அவர்கள், நான் என்னுடைய வீரத்திருமகனின் உடலைப் பெற்று முறையாகக் குளிப்பாட்டி கபன் இட்டு அடக்கம் செய்யாதவரை எனக்கு மரணம் வரக்கூடாது என்று பிரார்த்தனை செய்தார்கள்
அதுபோல் அவர்களின் பிரார்த்தனை இறைவனால் ஏற்றுக் கொள்ளப்பட்டது! சிதைக்கப்பட்டும் சிதைந்த நிலையிலும் இருந்த மகனாரின் உடலை அதன் துயரமான காட்சியைக் கண்டபோதும் அஸ்மா (ரழி) அவர்களின் நாவு அல்லாஹ்வைப் புகழ்ந்து கொண்டிருந்ததெனில்.. அவர்களின் நெஞ்சுரத்தையும் நிதானமிழக்காத பொறுமையையும் வார்த்தைகளால் எப்படி வர்ணிக்க முடியும்!
உடல் மிகவும் கெட்டுப்போய் இருந்தபடியால் மிகவும் பேணுதலுடன் குளிப்பாட்டப்பட்டு நல்லடக்கம் செய்யப்பட்டது!
மகனார் அடக்கப்பட்டு ஒரு வாரத்திற்குள் தாயாரும் ஏறக்குறைய 100வது வயதில் மக்கத்து திருநகரில் மரணமடைந்தார்கள்!
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி
ராஜிவூன்….
அறிந்து கொள்ளுங்கள் சஹாபாக்களின்
வாழ்வு மிக எளிதாக அமைந்திட வில்லை…சத்தியத்திற்காக உயிர் தியாகம் செய்பவர்களாவே இருந்தனர்…
அஸ்மா பின்த் அபுபக்கர் (ரலி) வாழ்வில்
பல ஏற்றதாழ்வான வாழ்க்கை பார்த்தவர்கள்…
இஸ்லாம் அறிமுகமான புதிதில் 18ஆம் நபராக இஸ்லாத்தை ஏற்றார்கள்…
அவரது கணவர் ஜுபைர் இப்னு அல்வாம்
(ரலி) இஸ்லாம் அறிமுகமாக முதல்17 வயதில் இஸ்லாத்தை ஏற்றாதால் வீட்டில் அடியும் உதைமாக சித்திரவதை செய்யப்பட்டார் . பிடிவாதம் கண்டு வீட்டில்
இருந்து விரட்டினர்.
சொத்துக்களை இழந்து இஸ்லாத்தை ஏற்றார். ஏழ்மையான நிலையில் தான்
அஸ்மா (ரலி) ஜுபைர் (ரலி) அவர்களின்
ஈமானை மட்டுமே கண்டு திருமணம்
செய்து கொண்டார். கடுமையான
வறுமையில் இருப்பதை கண்ட நபி (ஸல்)
அவர்கள் சிறு பேரிச்சை தோட்டத்தை அளித்தார்கள். அங்கு சென்று பேரிச்சை கொட்டைகளை சேகரித்து பல மைல் தூரம் சுமந்து வந்து தமது வீட்டு ஒட்டகங்களுக்கு அந்த பேரிச்சை கொட்டைகளை இடித்து உணவாக கொடுப்பார்கள்….
சிறிது காலத்தில் ஜுபைர் (ரலி) வியாபாரம் செழிப்பாக இலாபம்
கிடைத்தது….
இருந்தும் தடிமனான ஆடையும் எளிய
வாழ்வியலையே விரும்பினர்.
நபிகளாரின் ஹிஜ்ரதிற்கு பெரிதும் உதவிய பெண்மணி அபூஜஹ்ல் நபிகள்
எங்கு இருக்கிறார் என்பதை அறிய
அபூபக்கர் ரலி வீட்டிற்கு விரைந்தார்.
கதவுகள் தட்டப்பட்டது…வெளியே வந்ததோ இளம் வீரபெண் அஸ்மா (ரலி)
உன் தந்தையும் முஹம்மது ம் எங்கே இருக்கிறார் என்று மிரட்டினார்..
எதற்கும் அஞ்சவில்லை அவர்கள்.
கன்னங்களில் ஓங்கி அடித்தார்…
எதற்கும் சளைக்காமல் துணிகரமான
அத்துணை இன்னல்களையும் தாங்கி
கொண்டு நபிக்கும் தம் தந்தைக்கும்
உணவு தயாரித்தார்கள்
தவ்ர் குகையில்
இருந்த நபிக்கும் அபூபக்கர் (ரலி)க்கும்
எதிரிகளின் கண்களை மண்ணை
தூவி சாதூரியமாக உணவு கொண்டு
சென்றவர். ஆடுகளை மேய்த்து கொண்டு
போய் அங்கு ஆட்டின் பாலை கறந்து
அவர்களுக்கு கொடுப்பார்கள்…
எதிரிகள் காலடி சுவடுகளை கண்டுபிடிக்காமல் இருக்க ஆட்டு மந்தையை ஒட்டி வந்தார்கள்.
ஹிஜ்ரத் நீண்ட பயணித்திற்காக
உணவு தயாரித்து கட்ட துணி இல்லாமையால் தனது இடுப்பில் கட்டிய
துணியை இரண்டாக கிழித்து அதில்
ஒன்றை தனக்கும் ஒன்றை உணவை கட்டவும் பயன்படுத்தியதால்…
நபிகளாரால் “தாதுல் நிதாகைன்” “இரண்டு
வார்வுடையவரே” என்று பட்டம்
சூட்டினார்கள்…
தமது மகன் ஆட்சி செய்ததையும் கண்டார்..
தனது மகன் கொல்லப்பட்டு சிதைந்து
உடலோடு கிடந்ததையும் கண்டார்கள்
அந்த வீர பெண்மணி அஸ்மா பினத்
அபூபக்கர் (ரலி)…
நட்புடன்
முஹம்மத் ஜூபைர் அல்புஹாரி ❣️