நபிகள் நாயகம்(ஸல்) நவின்றார்கள் :
“பெற்றோர்களுக்கு உதவி செய்யும் பிள்ளைகளுக்கு (எனது) வாழ்த்து உண்டாகட்டும் அவருடைய வயதை அல்லா அதிகப் படுத்துவானாக. ஆமீன்”
நூல்- புஹாரி
” பெற்றோரின் பிரியத்தில் தான் அல்லாஹ்வின் பிரியமும் இருக்கிறது. பெற்றோரின் கோபத்தில் தான் அல்லாஹ்வின் கோபமும் இருக்கிறது. ”
அறிவிப்பாளர் :அப்துல்லாஹ் இப்னு அம்ரிப்னு ஆஸ் (ரலி)
நூல்- திர்மிதி
“பெற்றோரை (மனம் நோகச் செய்து) அழுது கண்ணீர் வடிக்கச் செய்வது பெரும் பாவம் ஆகும் – தண்டனைக் குரியதாகும்.”
நூல்- புஹாரி
குர்ஆனில் அல்லாஹ்விற்கும் அவனது தூதருக்கும் அடுத்தபடியாக முன்னுரிமை கொடுக்கபடுவது பெற்றோர்கள்தான்.
அத்தகைய பெற்றோரின் பொருத்தம் இல்லாமல் சுவனத்தின் வாசல் திறக்கபடாது .
மற்றொரு சந்தர்ப்பத்தில் முஹம்மத் (ஸல்) அவர்களிடம் மனிதர் ஒருவர் வந்து ‘அல்லாஹ்வின் தூதரே! பிள்ளைகள் மீது தாய் – தந்தையருக்குரிய உரிமைகள் என்ன? எனக்கேட்டார். அதற்கு முஹம்மத் (ஸல்) அவர்கள், ‘தாய் தந்தையரே உம்முடைய சுவனம் ஆவார்கள். அவர்களே உம்முடைய நரகமும் ஆவார்கள்’ என்று கூறியதாக அபூ உமாமா (ரலி) அறிவித்துள்ளார்கள். (ஆதாரம் : இப்னு மாஜா)
இந்த இரண்டு நபி மொழிகளும் பெற்றோரின் சிறப்பையும் மகத்துவத்தையும் எடுத்துக் காட்டக்கூடியதாக உள்ளன. அதனால் அவர்கள் உண்மையான மன மகிழ்ச்சி மிக்கவர்களாக வாழக்கூடிய சூழலை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். அது ஒவ்வொரு பிள்ளையினதும் பொறுப்பு என்பதை இந்நபி மொழிகள் தெளிவுபடுத்திக்கொண்டிருக்கின்றன.
மேலும் முஹம்மத் (ஸல்) அவர்களிடம் மனிதரொருவர் ஒருமுறை வந்து ‘அல்லாஹ்வின் தூதரே! என் அழகிய நட்புக்கு மனிதர்களில் அதிக தகுதியுடையவர் யார்?’ எனக் கேட்டார். அதற்கு முஹம்மத் (ஸல்) அவர்கள் ‘உன் தாய்’ என்று கூறினார்கள். அதன் பின்னர் ‘யார்?’ என அம்மனிதர் கேட்டார். அப்போதும் முஹம் மத் (ஸல்) அவர்கள் ‘உன் தாய்’ என்றார்கள்.
அதனைத் தொடர்ந்து அம்மனிதர் மீண்டும் 3வது தடவையாகவும் ‘யார்?’ எனக் கேட்டார். அதற்கும் முஹம்மத் (ஸல்) அவர்கள்‘உன் தாயே!’ என்றார்கள். எனினும் அம்மனிதர் நான்காவது தடவையாக ‘யார்?’ என வினவினார். அப்போது ‘உனது தந்தை’ என்றார்கள் என அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவித்துள்ளார்கள்.
(ஆதாரம் : புகாரி, முஸ்லிம்)
இஸ்லாத்தில் பெற்றோரின் மகத்துவம்
முஹம்மத் (ஸல்) அவர்கள், இறந்து விட்ட தம் பெற்றோருக்காகப் பிள்ளைகள் நிறைவேற்ற வேண்டிய பணிகளையும் கூட சொல்லி வைத்துள்ளார்கள். இதன்படி பெற்றோர் விவகாரத்தில் இஸ்லாம் எவ்வளவு தூரம் கரிசனை காட்டி இருக்கின்றது என்பது நன்கு தெளிவாகின்றது.
ஒருமுறை மனிதர் ஒருவர் முஹம்மத் (ஸல்) அவர்களிடம் வந்து, ‘எனது பெற்றோர் இறந்து விட்டால் அவர்களுக்கு உபகாரம் செய்தல் என்று ஒரு விடயம் உள்ளதா?’ எனக் கேட்டார். அதற்கு முஹம்மத் (ஸல்) அவர்கள் ‘ஆம்’ எனக் கூறிவிட்டு பின்வரும் விடயங்களைக் குறிப்பிட்டார்கள்.
* ‘அவர்களுக்காகப் பிரார்த்தனை செய்தல்,
* அவர்களுக்காகப் பாவமன்னிப்பு கோருதல்
* அவர்கள் செய்துகொண்ட உடன்படிக்கைகளை நிறைவேற்றுதல்,
* அவர்கள் மூலமான உறவுகளைச் சேர்த்து நடத்தல்
* அவர்களது நண்பர்களைக் கொளரவப்படுத்தல்
என்றும் கூறினார்கள். (ஆதாரம் : அபூதாவுத்)
இன்றைய நிலைமை
என்றாலும் அல்-குர் ஆனும், ஸ¤ன்னாவும் பெற்றோருக்கு அளித்து இருக்கின்ற இந்த மகத்துவத்தையும், சிறப்பையும் இன்றைய கால கட்டத்தில் அறியாதவர்களாகவே பெரும்பாலானவர்கள் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். அறிந்திருக்கும் சிலரோ அவற்றைப் பொருட்படுத்தாது நடந்து கொள்ளுகின்றனர். இதனை அவர்களது நடத்தைகளும், செயற்பாடுகளும் வெளிப்படுத்திக் கொண்டிருக்கின்றன.
இதேவேளை யமன் நாட்டைச் சேர்ந்த நபரொருவர் முஹம்மத் (ஸல்) அவர்களின் சமூகத்திற்கு வந்தார். அவரை முஹம்மத் (ஸல்) அவர்கள் விசாரித்தார்கள். ‘யமன் நாட்டில் உமக்கு உறவினர்கள் எவராவது இருக்கின்றாரா?’ என வினவினார்கள். அப்போது அந்நபர் ‘ஆம் என் பெற்றோர் இருக்கின்றனர்’ என்றார். அப்போது முஹம்மத் (ஸல்) அவர்கள் ‘நீர் இங்கு வருவதற்கு அவர்கள் அனுமதி வழங்கினாரா?’ எனக்கேட்டார். அச்சமயம் அந்நபர், ‘இல்லை.
நான் அனுமதி கேட்கவில்லையே!’ என்றார். அப்படியென்றால் நீர் திரும்பிச் செல்லும். இங்கு வரவென அவர்களிடம் (பெற்றோர்) அனுமதி கேளும். அவர்கள் அனுமதி அளித்தால் இங்கு வந்து ஜிஹாதில் கலந்துகொள்ளலாம். இல்லையெனில் அவர்களுக்குச் சேவை புரிந்த வண்ணம் இருந்து அவர்களுடன் நல்ல முறையில் நடந்து கொள்வீராக! எனக் கூறி அனுப்பியதாக அபூ ஸயீத் (ரலி) அவர்கள் அறிவித்துள்ளார்கள். (ஆதாரம் : அபூதாவூத்)
மேற்சொன்ன நபி மொழிகளைப் பொதுவாக எடுத்து பார்த்தால் பெற்றோருக்கு பணிவிடை செய்வதானது அல்லாஹ்வுக்கு மிக விருப்பமான செயல்களில் ஒன்றாக விளங்குவதைக் காணக்கூடியதாகவுள்ளது. அதேநேரம் அது இறைவழியில் போராடுதல் (ஜிஹாத்) ஹிஜ்ரத் செய்தல் போன்ற நற்காரியங்களை விடவும் மேலான ஒன்றாகவும் விளங்குகின்றது.
பெற்றோருக்கு சேவை செய்தல் என்ற நல்லமல் செய்தால் சுவர்க்கம். இல்லையேல் நரகம்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள், வயது முதிர்ந்த தன் பெற்றோர் இருவரையோ, அல்லது ஒருவரையோ பெற்றிருந்தும் சுவனம் செல்லாமல் போய் விட்ட மனிதன் நாசமடைவானாக! பின்னர் நாசமடைவானாக! பின்னர் நாசமடைவானாக.
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி) நூல்: முஸ்லிம்
தொழுகையா? தாயா?
பனு இஸ்ராயீல் சமுதாயத்தைச் சேர்ந்த ஜுரைஜ் என்று அழைக்கப்பட்டு வந்த ஒருவர் தொழுது கொண்டிருந்தார். அப்போது அவரின் தாயார் வந்து அவரை அழைத்தார். அவருக்கு பதில் கூற ஜுரைஜ் மறுத்துவிட்டார். ‘நான் அவருக்கு பதிலளிப்பதா, அல்லது தொழுவதா? என்று (மனத்திற்குள்) கூறினார். பிறகு (மீண்டும்), அவரின் தாயார் அவரிடம் வந்து, (தான் அழைத்தும் தன் மகன் பதிலளிக்க வில்லையே என்ற கோபத்தில்), இறைவா! விபசாரிகளின் முகத்தில் விழிக்கச் செய்யாத வரை அவனுக்கு (ஜுரைஜுக்கு) மரணத்தைத் தராதே என்று கூறினார்.
(ஒரு நாள்) ஜுரைஜ் தன் ஆசிரமத்தில் இருந்தார். அப்போது ஒரு பெண், நான் ஜுரைஜை நிச்சயம் சோதனைக்குள்ளாக்குவேன் என்று கூறினாள். அதற்காக, ஜுரைஜின் முன்பு வந்து அவருடன் (தகாத உறவு கொள்ள அழைத்துப்) பேச முனைந்தாள். அவர் (இணங்க) மறுத்துவிட்டார். எனவே, அவள் ஒர் இடையனிடம் சென்று, தன்னை அவனுடைய ஆளுகைக்குள் ஒப்படைத்துவிட்டாள். அதன் காரணமாக ஒரு (ஆண்) குழந்தையைப் பெற்றெடுத்தாள். பிறகு, இவன் ஜுரைஜுக்குப் பிறந்தவன் என்று கூறினாள். (இதைக் கேட்ட) மக்கள் (வெகுண்டெழுந்து) ஜுரைஜிடம் வந்தனர்; (கோபாவேசத்தில்) அவரின் ஆசிரமத்தைத் தகர்த்து உடைத்துவிட்டனர்; அவரை (அவரின் அறையிலிருந்து) இறக்கி அவரை ஏசினர். ஜுரைஜ் உளுச் செய்து தொழுதார். பிறகு அக்குழந்தையிடம் வந்து, குழந்தையே! உன் தந்தை யார்? என்று கேட்டார். அந்தக் குழந்தை (வாய் திறந்து), (இன்ன) இடையன் என்று கூறியது. இதைச் செவியுற்ற மக்கள், உங்கள் ஆசிரமத்தைத் தங்கத்தால் நாங்கள் கட்டித் தருகிறோம் என்று (ஜுரைஜிடம் அனுமதி) கேட்டார்கள். அதற்கு ஜுரைஜ் இல்லை; களிமண்ணால் கட்டித் தந்தாலே போதும் என்று கூறிவிட்டார். ஆதாரம் : புகாரி 2482 அறிவிப்பவர்: அபு ஹுரைரா
இந்த ஜுரைஜின் தாயார் விபசாரியை பார்க்காமல் மரணிக்க செய்யாதே என்று கூறினார்கள்
இதுவே விபசாரம் செய்யாமல் மரணிக்க செய்யாதே !! என்று இறைவனிடம் துஆ
செய்திருந்தால் கட்டாயம் அல்லாஹ் அதை ஏற்றுக்கொண்டிருபான் . அது எவ்வளவு
பெரிய இறைநேசரானாலும் சரி !!!
தொகுப்பு
முகமது ஜுபைர் அல்புஹாரி